விலைபேச முடியாத இமய மென்றே
விழாவெடுத்தோம் புகழ்ந்துரைத்தோம் இன்றோ நீங்கள்
நிலையாமை நிலைத்ததென்ற குறட் கருத்தை
நினைவூட்டிக் கண்மூடித் துயில்கின் றீரோ
அலைகடலும் மாஉலகும் வணங்கி வாழ்த்தும்
அய்யாவாம் பெரியாரைக் காண்ப தற்கே
அலைகடலாய்ப் புகழேந்திப் புறப்பட் டீரோ ?
ஆசானாய் இயற்கையுமை அழைத்த தாமோ ?
அய்யாவாய் வீரமணி ஈங்கிருக்க
அவர்துணையை மறந்தோராய் ஏன் துயின்றீர் ?
பொய்யானோர் குவிகின்றார் என்பதாலா ?
புதுவாழ்வைத் தேடுதற்கே புறப்பட்டீரோ.
நெய்வடியும் உம்பேச்சில் நெற்கதிர்கள்
நிறைவளமாய்க் கொட்டுமுன்றன் பேரெழுத்தில்
வெய்யோனும் வெண்ணிலவும் உம்மிழப்பை
விரும்பாமல் தேம்பியழும். துயில்வதேனோ ?
திருமகளை உம்வாழ்வின் துணையாய்ப் பெற்றும்
திரும்பாத ஊருக்குப் பயணம் ஏனோ ?
மருமகன்கள் மகன்களாகக் கிடைத்திருந்தும்
மறந்தவரைப் பிரிந்தீரே, ஞாயந்தானா ?
பெருமகளாய் உம்மகள்கள் பெருமை சேர்த்தார்
பெரியாரை உம் வழியே பற்றி வந்தார்.
ஒரு மகனாம் இசையின்பன் பேத்தி பேரன்
உமக்கென்ன குறையய்யா ? உறங்கி விட்டீர்.
எண்திசையும் பெரியாரின் புகழ் கிடக்கும்
எத்திசையில் இறையன்நீர் தேடச் சென்றீர்.
விண்திசையில் நீர்போந்து தமிழர் வாழ்வை
வித்தூன்றி வளர்ப்பதற்கே விரும்பி னீரோ.
மண்திசையில் தமிழரெலாம் மானம் விற்றார்.
மறந்தவரை நீங்கிடுவோம் என்றா சென்றீர் ?
புண்தசையாம் உடலென்று வெறுத்தொ துக்கிப்
புகழுயராய் வாழ்வதற்கு முடிவா செய்தீர்.
-கவிஞர் அரிமா.
No comments:
Post a Comment