Monday, June 4, 2018

கூட்டு முயற்சி, குழுப் பயிற்சிக்கு இலக்கணம் இறையனார்! - அ.அருள்மொழி

இப்படி ஒரு பட்டிமன்றம்..நடந்தது உங்களுக்குத் தெரியுமா ????

1986 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்.. ரஷ்யாவில் அதிர்ச்சி தரும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கி...உச்சத்தை தொடும் நேரம்.. "புரஸ்தராய்கா" என்ற பெயரில் தாராளமயத்தை தொடங்கினார் ரஷ்ய அதிபர் கோர்பசேவ்.

இனி இரஷ்யா என்ற நம்பிக்கை நாடு என்னவாகும்?அதன் தாக்கம் இந்தியாவில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற விவாதங்கள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருந்தன..

சோவியத் ரஷ்யா அமெரிக்கப் பாதையில் கால்வைப்பது சீரழிவே என்றும் அதனால் ரஷ்யா தன் தனித்துவத்தை இழந்து விடும் என்றும் திராவிடர் கழகம் விமர்சித்து எழுதியது.

இந்திய பொதுவுடமை இயக்கத்தினரோ அந்த மாற்றங்கள் சிறப்பானவை என்றும் ரஷ்யா மேலும் முன்னேறும் என்றும் ஆதரித்துப் பேசியும் எழுதியும் வந்தார்கள்.

அந்த நேரத்தில் பொதுவுடமை இயக்கத் தோழர்கள் ஒரு பட்டிமன்றம் ஏற்பாடு செய்தார்கள்.

இடம: வள்ளுவர் கோட்டம் சென்னை.

தலைப்பு: சோவியத்தில் தற்போது நடைபெறும். மாற்றங்கள் சோஷலிசதை வலுப்படுத்துமா? வலுவிழக்கச்செய்யுமா (எவ்வளவு சிறிய தலைப்பு!)

நடுவர்: தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

பொதுவுடமை இயக்கத்தினர் வலுப்படுத்தும் அணி.
அவர்களுக்குத் தலைவர் எழுத்தாளர் அறந்தை நாராயணன் அவர்கள்.
வலுவிழக்கச்செய்யும் என்ற அணியின் தலைவர் பேராசிரியர் இறையன் அவர்கள். அவருடன் அணியில் இருந்தவர்கள் 1.தோழர் விடுதலை ராஜேந்திரன். 2அருள்மொழியாகிய நான். 3. தோழர் அஜிதா.

நிகழ்ச்சி நடந்த அன்று வள்ளுவர் கோட்டம் நிறைந்து வழிந்தது..அரங்கில்..மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் பொதுவுடமை இயக்கத் தோழர்கள். ஒருபங்கு திராவிடர் கழகத் தோழர்கள். மேலும் கொஞ்சம் பொதுப் பார்வையாளர்கள்.

எதிர்பாராத காரணத்தால் அடிகளார் வரவில்லை. தோழர் அஜிதாவும் கலந்து கொள்ள இயலவில்லை. பொதுவுடமை அணியில் இருந்த மூத்த தோழர் நடுவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

வாதங்கள் தொடங்கின. பட்டாசு வெடிக்காத குறைதான். பொதுவுடமைத் தோழர்கள் வைத்த வலிமையான கருத்துக்களை மறுத்து எங்கள் அணியின் வாதத்தைத் தொடங்கினார் பேராசிரியர் இறையன் அவர்கள்.அவரது ஒவ்வொரு கருத்தும் கைதட்டலை எழுப்பியது. ஆதரவுக் குரல்களும் எழுந்தன.

அவர் பேசும் முறையே ஒரு நாடகம் போல் இருக்கும். பேச்சைத் தொடங்கும் முன்பு வேட்டியை ஒருமுறை இறுக்கிக் கட்டியபடி எதிரணியினரை ஒரு பார்வை பார்ப்பார்.

ஒவ்வொரு கருத்தும் பார்வையாளர்களை சென்று சேர நேரம் கொடுப்பார். கைத்தட்டல் ஓசை அடங்கக் காத்திருப்பார். அவரைத் தொடர்ந்து விடுதலை ராஜேந்திரன் அவர்களும் நானும் பேசியபோது எங்கள் வாதங்களை ஆதரித்து கைதட்டியவர்களில் அதிகம் பேர் பொதுவுடமைத் தோழர்களே. தீர்ப்பைப் பற்றி கவலைப்படாமல் பேசுகிறவர்கள் வைத்த ஆதாரங்களை ஆரவாரத்துடன் வரவேற்ற சிறந்த ஒரு பட்டிமன்றம் அது.

அந்தப்பட்டி மன்றம் முடிந்து பல ஆண்டுகளுக்கு அதைப் பற்றிய பேச்சு இருந்து கொண்டே இருந்தது. அதுசரி..அந்தப் பட்டிமன்றத்தில் எங்கள் பேச்சுக்கள் அவ்வளவு சிறப்பாக அமைத்ததற்கு என்ன காரணம் தெரியுமா? வாரக்கணக்கில் இரண்டு பக்க செய்திகளையும் சேகரித்து ஆதரவு எதிர்ப்புக் கருத்துக்களைப் பிரித்து.. ஒவ்வொருவரும் எதை எதை பேசப் போகிறோம் என்று தேர்வுசெய்து முதல்நாளே எங்களுடன் விவாதித்து வழிநடத்திய இறையனார் அய்யாவின் உழைப்பும் வழிகாட்டுதலுமே காரணம்.

கூட்டு முயற்சி, குழுப்பயிற்சி, நமது வெற்றி என்ற சொற்களுக்கு இலக்கணம் அய்யா இறையனார்.

தந்தை பெரியாரின் பாதையில் தடுமாற்றம் இல்லாமல் பயணம் செய்த தனித்தமிழ்ப் பற்றாளர். இன்று அவரது பிறந்தநாள்.

Tuesday, March 15, 2011

குடியாட்சிப் பண்புகளில்!

தமிழ்நாட்டை உள்ளடக்கிய இந்தியப் பெருநாட்டில் கழிந்த அரை நூற்றாண்டுக் காலமாக இடம் பெற்று வரும் ஆட்சியியல் நடவடிக்கைகள் மக்களாட்சி இலக்கணத்திற்குட்டவையா எனும் வினா எழுப்பப் பெற்றால் " இல்லை " எனும் விடையே பேருருவெடுத்து நிற்கும் !

குடியாட்சி இலக்கணததை மிகவும் பகடி - கேலி செய்து கொக்கரிப்புச் சிரிப்பு சிந்துவதைப்போல, அவ்வளவு முரண்பாடாக அரசியல் இருப்பது எதனால் ?

குடியாட்சிப் பண்புகளில் குறைந்த அளவுப் பயிற்சி கூட நம் மக்கள் அனைவருக்கும் தரப்படாத குற்றமே இதற்கு அடிப்படையான காரணம் !

மக்களாட்சி முறை வெற்றி பெறப் படிப்பு, பயிற்சி இரண்டும் குடிகட்கு இன்றியமையாதவை. இரண்டில் ஒன்றேனும் இருந்தால் கூட சற்று தாழ்வில்லை எனலாம். நம் மக்களுக்கு இவை இரண்டும் இல்லை. படிப்பில்லா மக்களுக்குப் போதிய பயிற்சி அளிக்கப்பட்டிருந்தாலாவது ஓரளவு பலன் விளைந்திருக்கும்.  

ஆண்டை மனப்பான்மை
         ஆட்சி என்றால் என்னவென்று தெரியா ம(மா)க்கள் கோடிக் கணக்கில் நம் நாட்டில் வாழ்கின்றனர். அவர்கட்குக் குடியாட்சி என்பது பற்றியும் அதில் தாங்களே முதன்மையானவர்கள், அடிப்படையானவர்கள், அதிகாரிகள் எனும் நிலைப்பற்றியும் தெளிவு கிடையாது. தங்களால் தேர்ந்தெடுக்கப்பெறும் முகவர்கள் தங்களுக்கு வேண்டியவற்றைச் செய்வதற்குத்தான் சட்ட மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் அமைச்சரவையிலும், பொறுப்பேற்கிறார்கள் என்பதை முழுமையான புரிந்து கொள்ளவில்லை. அதாவது புரிந்து கொள்ளுமாறு செய்யப்பட வில்லை.

இந்த நிலையில் தங்களுடைய ஒப்புச் சீட்டுகளின் அருமையும் பெருமையும் அவர்களால் உணரப்படுவதில்லை. அரசினரின் நடவடிக்கைகள் அவர்களால் ஆய்வு செய்யப்படுவதில்லை. தங்களின் முகவர்கள் அமைச்சர்கள் ஆகியோரின் தவறுகள் அவர்களால் சுட்டிக் காட்டப்படுவதில்லை. தங்களின் உரிமைகளை அவ்வப்போது தட்டிக் கேட்பதற்கு அவர்கள் முனைவதில்லை.

பிறகெப்படி ஆட்சி மக்களுக்காக மக்களால் ஆளப்படும் மக்களினது ஆட்சியாக இருக்க முடியும்?


எனவே, தான் வேட்பாளர்கள் மக்களுக்குக் கையூட்டு வழங்கத் துணிச்சலாக முன் வருவதும், தேர்ந்தெடுக்கப்பட்டபின் அதிகாரமாக ஆண்டைப்பான்மை - எஜமானத்தனம் காட்டுவதும் தாராளமாய் நடக்கின்றன. ?


குடி செய்யும் நெறிகளா?
உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒழுங்காகச்     சென்று கடமையாற்றாமை (சான்று : தொலைக்காட்சி)


  • வாக்கெடுப்பு" நடக்கையில்கூட மண்டபத்தினுள் இல்லாமை. 
  • பணத்திற்காக ஒப்பளிப்புச் செய்தல். 
  • நாகரிகமில்லாமல் கூச்சல் போடுதல்.  
  • அவைத் தலைவரையே முற்றுகையிடுதல்.  
  • உறுப்பினர் ஒருவர்க்கொருவர் "போடா, வாடா" என்று ஏசிக் கொள்ளுதல்.  
  • பண்பாடற்ற அருவருப்பான கெட்ட சொற்களைப் பயன்படுத்தி வைதல். 
  • ஆடை களைந்து காட்டும் நாணமின்மை.  
  • இடத்தை விட்டு எழுந்து முன்னே விரைதல்.  
  • இருக்கைகளின் மேலேயே ஏறிப் பாய்தல்.  
  • ஆளுநர் உரையின்போதும், முதலமைச்சர் உரையின்போதும் தடைக் செயல்களில் ஈடுபடுதல்.  
  • எதிர்க் கட்சியினரைப் பகைவராகவே கருதுதல்.  
  • உடன் உறுப்பினர்களைத் தாக்குதல்.  
  • அவைத் தலைவர் அனைத்துக் கட்சியினருக்கும் தாம் பொது என்று எண்ணி நடவாமை. 
  • அமைச்சர்கள் ஒழுங்காக விடை சொல்லும் பொறுப்பிலிருந்து வழுவுதல்.  
  • மக்களின் நன்மைக்காக என்றில்லாமல் தன்னல நோக்குடன் ஆட்சித் தலைவர்கள் சட்டம் செய்தலும் சட்டத்தைத் திருத்துதலும்.  
  • கெட்ட உள்நோக்கத்துடன் .  மாநில அரசுகள் கலைக்கப்படுதல்
  • பணத்திற்காகவும், பதவிக்காகவும் கட்சி  மாறுதல்
  • சாலைகள் அமைத்தல், நீர்க் குழாய்கள் அமைத்தல், குளம் - ஏரி கண்மாய்களில் தூரெடுத்தல், பல வகையான கட்டுமானங்கள், ஒக்கிடுதல்கள், பராமரிப்புகள் முதலிய செயல்கள் நடக்கையில் பித்தலாட்டங்கள் - கையாடல்கள் - கொள்கையிடல்கள் ஆகியவற்றை நிகழ்த்துதல்; 
  • தேர்தல்களின் போது கள்ளச்சீட்டுப் போடச் , ஒப்போலைகளை ஒட்டு மொத்தமாகக், சீட்டுப் பெட்டிகளையே எடுத்துக் கொண்டு ஓடி . விடுதல் கவர்தல்செய்தல்
இவை பற்றிய செய்திகள் அடிக்கடி வெளியாகின்றன. இவ்வாறு நாட்டினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை போல (Taken for granted) போல மிகமிக இயல்பாகப் போய்விட்ட இந்த நிலவரங்களெல்லாம் " குடி செய்யும் நெறிகள் " ஆகுமா? ஆகவே ஆகா!

80 ஆண்டுக்கு முன்னரே .....
இப்படி குடியாட்சிப் பண்புகளில் மக்கள் பயிற்சி பெறாவிட்டால் ஒழுங்கீனங்களும் நாணயக் கேடுகளும், நேர்மைக்கு நேர்ச்சிகளும், பொது ஒழுக்கச் சாவுகளும், மாந்தத் தன்மையற்ற கடுமைகளும், நாட்டில் ஊன்றப் பெற்று அவைதாம் நாட்டு நடப்பு நிலை (Order of the Day ) என்று ஆகிவிடும் என்பதை 80 ஆண்டுகளுக்கு முன்னரே நீதிக் கட்சி என அழைக்கப்பட்ட தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் பார்ப்பனரல்லா முன்னோடிகளும் பின்னர் அக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நம் இன மீட்பர் தந்தை பெரியாரும் கற்பனை செய்துவிட்டனர்.
         
அவ்வண்ணமே தங்களின் எதிர்பார்ப்பை அந்தக் காலத்திலேயே பொறுப்புணர்ச்சியோடு வெளியிடவும் செய்தனர்.

1916- "டிசம்பரில் நீதிக் கட்சித் தலைவர்கள், மக்கள் தொண்டர் பிட்டி தியாகராயர் பெயரால் வெளியிட்ட பார்ப்பனரல்லாதார் பேரறிக்கை என்னும் புகழ் தோய்ந்த ஆவணத்தில், " தேசியங்கள் " கோரிய முழுமையான உடனடியான குடிமக்கள் தன்னாட்சி (Home lrule ) பற்றிக் குறிப்பிட்டு" பெரும்பன்மை மக்களின் படிப்பின்மையையும் தகுதி யின்மை யையும் பற்றிப் பொருட்படுத்தாக மக்களாட்சிக் கோரிக்கை குறித்து நம் மறுப்புக் கருத்தை உரிய காலத்தில் ஒலிக்கவில்லையேல், எல்லா மக்களும் அதனை ஏற்றுக் கொண்டுவிட்டோம் என்றாகிவிடும்.

விரும்பத்தகாத விளைவுகள்பற்றிய கவலையோடு நன்றாக வரையறுக்கப்பட்ட மக்களின்பால் நம்பிக்கைவைக்கும் கொள்கையால் விளையும் முற்போக்கான வளர்ச்சி, மக்களின் தகுதியுடைமை மெய்ப்பிக்கப் பட்டதன் பின் தொடர்ச்சியாக, காலங் கருதி வழங்கப்படும் உரிமைகள் இவற்றை மட்டுமே நாம் வலுவாக ஏற்கிறோம் என்பதைக் கூறியாக வேண்டும்.

அரசினர் இதுபற்றி நடவடிக்கை மேற்கொள்ளுவதற்கு முன்பாக, அனைத்துச் சாதியினர், வகுப்பினர், இனத்தினர் தம் ஆர்வங்களையும், விருப்பங்களையும் பற்றி ஆய்வு செய்ய வேண்டும். நம் பார்ப்பனரல்லா மக்கள் முதலில் தம் பையன்களையும், பெண்பிள்ளைகளையும் மிகப் பெரும் எண்ணிக்கையில் படிக்க வைக்க வேண்டும் ’’ என்பதாகச் சாற்றினார்.

நான்காம் நெறி  
           
சில மாதங்கள் கழித்து1917- இல் தெ.... சங்கத்தின் சட்ட திட்டங்கள் வெளியிடப்பட்டபோது மேற்குறிப்பிட்ட கருத்தே 4-ஆம் நெறியாக இப்படி இடம் பெற்றது:
             
விரும்பத்தகா விளைவுபற்றிய அக்கறையோடு நன்கு வரையறைசெய்யப்பெற்ற - மக்களிடம் நம்பிக்கை வைக்கும் கொள்கைபயக்கும் முற்போக்கான வளர்ச்சி, மக்களின் தேர்ச்சி உறுதிப்பட்டமைக்குச் சான்று தோன்றிய விடியலின் பிறகு, காலத்தினால் அளிக்கப் பெறும் உரிமைகள் ஆகியவற்றை மட்டுமே சங்கத்தனர் திண்ணமாக ஒப்புகின்றனர். முழுமையான தன்னாட்சிக்கான காலம் இந்தியாவில் இன்னும் வரவில்லை. அந்த நோக்கத்தினை எய்துவதற்கு நம்மை அணியப்படுத்திக் கொள்ளும் காலம் இது ".
    
எப்படிப்பட்ட தொலைநோக்கும் எதிர்பார்ப்பும், உரிமையுணர்வும், துணிச்சலும் நீதிக்கட்சிப் பெருமக்கட்கு இருந்திருக்கின்றன என்பதை எண்ணிப் பார்க்கையில் பெரிய மலைப்பும் வியப்பும தோன்றுகின்றன.

Friday, February 11, 2011

படிப்பு பெருமை இல்லாத காமராசரின் படைப்புப் பெருமை


            ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்படுவதற்கு முன்பு பணியாற்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எனபோரின் பொறுப்பில் மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் ஆங்காங்கே ஓராசிரியர் பள்ளிகள் என்பவை திறக்கப்படடன.  வேலையற்றோர் நிவாரணத் திட்டம்எனும் பெயரில் ஓராசிரியர் பள்ளிகள் உருவாக்கப்பட்டன.  “ Planning Commission Schools under unemployment Relief Scheme ” என்று அவை ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டன.

            1950- களில் உயர்நிலைப்பள்ளி நீக்கப் பொதுத் தேர்வில்  வெற்றி பெற்று (அந்த நாள்களில் அதுவே குறிப்பிடத்தக்க போதிய படிப்பு !) வேலையில்லாதிருந்த ஆயிரக்கணக்கானோர் ஓராசிரியர்களாக அமர்த்தப்பட்டனர்.  ஆசிரியர்ப் பயிற்சி பெறாதோர் அவர்கள் என்பது கவனத்திற்குரியது.  பயிற்சி பெற்றோராகவே போட வேண்டுமென்று குறியாக இருந்திருந்தால அக்காலத்தில் அவ்வளவு பேர் கிட்டியிருக்க மாட்டார்கள்.  ஒரு சில ஆண்டுகளில் அந்த ஆசிரியரனைவரும் முறையான ஆசிரியர்ப் பயிற்சி பெற்றுத் திரும்புமாறு ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது ! படிப்படியாக ஓராசிரியர் பள்ளிகளில் இரண்டு - மூன்று ஆசிரியர்கள் இடம் பெறும் நிலை உண்டாக்கப்பட்டு விட்டது.

            அந்தக் கால கட்டத்தில் தமிழக அரசின் கல்வித் துறையில் ஆசிரியராக முதலில் அமர்த்தப்பட்ட நான், குறுகிய காலத்தில் பள்ளி ஆய்வாளனாக மாற்றப்பட்டுத தொண்டாற்றும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன். எனவே பள்ளிகளின் எண்ணிக்கைப் பெருக்கத்தில் எனக்கு நேரடிப் பட்டறிவு உண்டு.  300-க்கு மேற்பட்ட எண்ணிக்கையில் மக்கள் வாழும் சிற்றூர்களைக் கண்டுபிடித்து அந்த ஊர்களிலெல்லாம் பள்ளிகளை அமைக்கும் பெரும்பணியினைப் பள்ளி ஆய்வாளர்களாக இருந்தோர் நன்கு உழைத்து நிறைவேற்றினர்.

            பள்ளிகளை நிறுவினால் மட்டும் போதுமா?  அன்றாடங் காய்ச்சிக் குடும்பங்களைச் சேர்ந்த பாலர்கள் பள்ளிக்கு வருவார்கள் என்பதற்கு என்ன உறுதி?  பள்ளிக்கு ஒரு வேளை வந்தாலும் பட்டினியால் வாடும் வறிய குடும்பங்களில் பிறந்த சிறு பிள்ளைகள் பசியுடன் பாடங் கேட்டால் பயன் விளையுமா?  இதை ஆழமாய்க் கருதிப் பார்த்த காமராசர் ஏழைக் குழந்தைகட்கு இலவசமாக்ப் பகலுணவு வழங்கும் திட்டத்தினைச் செயற்படுத்தினா.  கல்வியலுவலர்கள் பகலுணவுத் திட்ட அரசு உதவித் தொகைகளுக்கான காசோலைகளை எடுத்துக் கொண்டு பல ஊர்களுக்கும் விரைந்து அவற்றைத் தலைமையாசிரியர்களிடம் சேர்ப்பித்த நிகழ்ச்சிகள் இன்றும் நினைவில் இருக்கின்றன.

            ஊராட்சி ஒன்றியங்கள் உருவான பிறகு படிப்படியான முறையில் மூன்று ஆண்டுகளில கட்டாயக் கல்வித் திட்டத்தை நடப்புக்குக் கொண்டு வந்தார் காமராசர்.   அந்தக் கட்டத்தில் ஒன்றியங்களில் அமர்த்தப்பட்டிருந்த கு()முகக் கல்வியலுவலர்களின் துணையோடு ஊர் ஊராகச் சென்று பெற்றோர்களைக் கூட்டி சங்கம் அமைத்து, தமிழ்ச் சிறார்களைக் கல்வி பயில வைப்பதில் சரகக் கல்வியதிகாரிகள் குறிப்பிடத்தக்க வெற்றிகளைக் குவித்துக் காட்டினர்.

            1959- ஆம் ஆண்டிலிருந்து  62- ஆம் ஆண்டுவரை அருப்புக்கோட்டையிலும், விருதுநகரிலும் பணியாற்றிய எனக்குப் பெருந்தலைவர் காமராசரோடு அணுக்கமாய் பழகுகின்ற நல்வாய்ப்பு நிறையக் கிட்டியது.

            அதற்கும் முந்தியே அப்பெருந்தலைவரிடம் ஒரு சிறு அளவில் நான் அறிமுகமாகியிருந்தேன். பறம்புக்குடி மன்னர் சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் நாற்பது ஆண்டுகட்குமுன் நான் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அங்கு வருகை புரிந்த முதலமைச்சர் காமராசரைப் போற்றும் பாடலொன்றை இயற்றி அதை மாணாக்கரே ஆர்வம் மேலிடப் பாடுமாறு ஏற்பாடு செய்திருந்தேன். இசையின் இனிமையாலும் பாட்டினுள் அடங்கியிருந்த ஆட்சியின் அருஞ்செயல்களை சுட்டிக் காட்டும் பட்டியலாலும்  அவ்வகையில் உணர்ச்சி வயப்பட்ட  காமராசர் அப்பாடலை என்னிடமிருந்து பெற்று 10,000 படிகள் அச்சிடுமாறு, தம்முடன் வந்த சட்ட மன்ற உறுப்பினரை வேண்டிக் கொள்ளும் விந்தை அப்போது நேர்ந்தது.  மேலும் கல்வி ஆய்வு அலுவலராக நான் மாற்றமுற்ற பின்னர் அய்ந்தாண்டுத் திட்ட விளக்க நடவடிக்கைகளில் நானும் நிறையப் பங்கேற்க வாய்த்ததால் மாவட்ட ஆட்சியர், துணையாட்சியர் போன்ற அதிகாரிகளிலிருந்து கீழ்மட்ட அலுவலர்வரை அரசின் பல துறையினர்க்கும் நான் தெரிந்தவனானேன்.

            அந்த நிலையில் முதலமைச்சர் முகவை மாவட்டப்  பகுதிகளில் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்ட வேளைகளில் உடன் செல்லும் அதிகாரிகளின் பரிவாரக் குழுவில் நானும் அடங்கி அவரின் நல்லெண்ணத்தைப் பெறும் நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளிச் சீரமைப்பு மாநாடு, சீருடைகள் வழங்கு மாநாடு, புத்தகப் பை வழங்கு மாநாடு போன்று நாங்கள் ஏற்பாடு செய்த பல மாநாடுகளில் கலந்து கொண்ட முதல்வர் அம்முயற்சிகளைப் பேருவகையோடும், பூரிப்புடனும் பாராட்டி ஊக்குவித்த செய்திகள் இங்கு தேவையில்லை.  பல சிற்றூர்களில் எவ்வாறு திடீர்ப்பள்ளிகள் முளைத்தன என்பதை மட்டும் குறிப்பிட வேண்டும்.

            மக்களிடம் குறை கேட்கும் சுற்றுப் பயணங்களில் காமராசரிடம் அக்காலத்திய் சிற்றூர் மக்கள் வைத்த கோரிக்கைகளில் முதன்மையானவையாக இருந்தவை மூன்று.  மின்சாரம், இணைப்புச் சாலை, பள்ளி என்பவையே அவை.  நிலையான பரந்த ஒளியை ஊர் முழுதும் பாய்ச்சவல்ல மின்சாரம் தங்களின் சுவையற்ற - சந்தம் மாறா வழமையான நாட்டுப்புற வாழ்வுக்குப் புதிய வெளிச்சம் கொண்டு வந்து சேர்க்கும் என நம்பினர்  - சலித்துப் போயிருந்த மக்கள் முதன்மைச் சாலைகளைச் சென்றடைய வெறும் ஒற்றையடிப் பாதைகளையும் கரடுமுரடான பழைமையான வண்டிப் பாதைகளை மட்டும் பயன்படுத்திக் கொண்டிருந்த மக்கள், முறையான இணைப்புச்சாலை போடப்பட்டுவிட்டால் இன்றியமையா உடனடி உதவிகட்காகப் பேருந்துகள் ஓடும் சாலையை விரைந்தடைய எளிதாக  - ஏந்தாக விருக்குமென்று சரியாகவே அவர்கள் கற்பனை செய்தனர்.  அடுத்த ஊரில் இருக்கும் பள்ளிக்குத் தம் பிஞ்சுகளை அன்றாடம் அனுப்பி வைப்பதிலுண்டான தொல்லைகள் நீங்கும் வண்ணம் தம் ஊரிலேயே பள்ளியொன்று திறக்கப்பட்டால் தம் பிள்ளைகள் எழுதப் படிக்க மட்டுமாவது அடிப்படைக் கல்வி பெற்றுவிட முடியுமே என ஆர்வப்பட்டனர் பெற்றோர்.

            காமராசர் அந்தச் சூழ்நிலையில் எப்படி வினையாற்றினார் என்பது ஆர்வத்தூண்டவல்ல - வழக்கமீறிய தனித்தன்மையான செய்தி ! அரசின் பணவொதுக்கீட்டிற்கிணங்க இணைப்புச்சாலை அமைப்பதற்கான வாய்ப்பு பற்றி வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் அவ்வூருக்கெனத் தனியே ஒரு பள்ளி நிறுவுவதற்கான கல்வித் துறை நெறிகள் குறித்து என்னிடமும் ( பிற பகுதிகளில் உரிய கல்வி அலுவலரிடமும் ) கலந்து பேசிய பின்பு, குழுமிய மக்களிடம் முதல்வர் இப்படிக் கூறுவார்.

            மின்சாரம் வந்து கொண்டேயிருக்கின்றது. தமிழ் நாட்டின் அத்தனை சிற்றூர்களுக்கும் குறிப்பிட்ட காலத்திற்குள் மின்சாரம் வழங்கிவிட வேண்டுமென்று அரசு முழு மூச்சாக முயற்சியில் இறங்கியுள்ளது.  ஆகவே, உங்களுக்கு இன்னும் சில மாதங்களில் மின்சாரம் வழங்கப்பட்டு விடும்.  இதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.  அடுத்து, இணைப்புச்சாலைபற்றி உங்கள் பி. டி. . விடம் பேசினேன். கையிருப்பில் உள்ள நிதி ஒதுக்கீட்டிற்குத் தகுந்தபடி கூடிய விரைவில் செய்து விடுவதாக அவர் உறுதி கூறியிருக்கிறார்.  மூன்றாவதாக நீங்கள் கேட்டுள்ள பள்ளிக் கூடத்தை இதோ இங்கு இருக்கிறாரே இன்ஸ்பெக்டர், (என்னை புன்னகையுடன் சுட்டிக் காட்டி) இவர் நினைத்தால்  - அந்த சட்டம் இந்தச்சட்டம் என்று இடையூறு செய்யாமல் இருந்தால் - டி. . .  அவர்களின் ஒப்புதலோடு உடனடியாக ஒரு துணைப் பள்ளிக்கூடத்தையாவது இங்கு உண்டாக்கிவிட முடியும்.  சட்டங்களைக் காட்டி அதிகாரிகள் செய்யும் குறுக்கீடுகளால்தான் உடனடியாக மக்களுக்கு நன்மை செய்ய முடியாமல் சுணக்கம் ஏற்பட்டு விடுகிறது ! “

            இப்படிப் பேசி எங்களை நோக்கிச் சிரித்துக் கொண்டே கண் சிமிட்டி விட்டுச் சற்று நிறுத்துவார் பெருந்தலைவர்.

            நான் அடக்கத்துடன் எழுந்து நின்று ஆனால, அச்சமின்றி, உரிமையுணர்வோடு கருத்துரைப்பேன், “ பெருமதிப்பிற்குரிய முதல்வரய்யா அவர்கள் குறிப்பிட்டபடி சட்டம என்று எடுத்துக் கொண்டால் இந்த ஊரில் பள்ளி உண்டாகவே முடியாது.  இவ்வூர் மக்கள் தொகை 300 -க்கும் குறைவுதான்.  அருகிலேயே ஒரு கல்தொலைவுக்குள் தொடக்கப்பள்ளி இருக்கிறது.  ஆனால் இக்குடியிருப்பிலிருந்து 20 - க்கு மேற்பட்ட சிறுபாலர்கள் அன்றாடம் நடந்து சென்று அப்பள்ளியில் படித்துவிட்டு வீடு திரும்பும் நிலை கவலையளிக்கக் கூடியது.  இரண்டு ஊர்களுக்கும் இடையே ஏதேனும் வாய்க்கால் உள்ளதா? என்று நான் இங்கே கேட்டபோது,  ஓர் ஓடையுண்டு என்றார்கள்,  அந்தக் காரணம் போதும், ஓடையில் நீர் ஓடுவதுண்டா? என்பதைப் பற்றிக் கருதாமல், இயற்கைத் தடை (Natural barrier) இருப்பதாக இக்குடியிருப்பில் துணைப்பள்ளி (Feeder School) யொன்றைத் திறக்க நான் பரிந்துரை செய்ய முடியும்” .

            என் கருத்துரையில் பொதிந்து  கிடக்கும் பல பொருள்களை எண்ணி, முதல்வர் முக மலர்ச்சியோடு,  ரொம்ப சந்தோசம் இதற்காகத்தான் இந்த இன்ஸ்பெக்டரை கையோடு கூட்டிக் கொண்டு வருகிறேன்.  அவரின் பரிந்துரையை மாவட்டக் கல்வி அதிகாரி மறுக்க மாட்டார். அப்புறமென்ன?  இங்கேயே இப்போதே பள்ளிக்கூடத்தைத் திறந்து விடலாம்னேன் ! ” என்றுரைத்து,  ஊர்காரங்க கேட்ட மூன்றில் ஒன்றை உடனடியாகத் கொடுத்தாச்சய்யா என அறிவிப்பார்.

            காமராசர் ஆட்சியில் பல்லாயிரக்கணக்கான  பள்ளிகள், எப்படியெல்லாம் முளைத்தன என்னும் வரலாற்றை இன்றைய இளைஞர் தங்கள் மூளைகளில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென்ற விருப்பத்தினாலேயே இவற்றை எழுத நேர்ந்தது.  தற்போது வாழும் தமிழக மக்களில் பாதியளவுப் பேர் காமராசர் தோற்றுவித்த பள்ளிக் கழனிகளில் விளைந்திட்ட பயிர்களே.  தமிழக அரசின் வருவாயில் காற்பங்கினைக் கல்வித்துறையில் அந்த நாள்களில் நீண்ட கால திட்டமாக அவர் முதலீடு செய்ததன் பலன்களைத்தான் இந்த நாள்களில் நாடு நுகர்ந்து கொண்டிருக்கிறது.  அவரின் படைப்பாற்றல் இது.

            காத்தருளி  காமராசர்என்பதாக தந்தை பெரியார், அழைத்த தொலைநோக்கினையும், பொருத்தத்தையும் தற்காலத் தமிழ்த் தலைமுறையினர் தேர்ந்து தீர்மானிக்கட்டும்! .