ஒரே நாட்டு மக்கள் பிறவியில் பல சாதிகளாகப் பிரிக்கப்பட்டிருப்பது இந்தியாவில்தான் இருக்கின்றதே தவிர வேறு எங்கும் இல்லை.
பொதுவாக “ ஜாதி “ என்பது, இந்துக்கள் என்பவர்களுக்குள், ஆரியக் கொள்கைகளுக்கு அடிமைப்படுபவர்களுக்குள் மாத்திரம்தான்- “கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டது“ என்கின்ற கொள்கையின்மீது நாலு ஜாதிகளாக, அதுவும் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. இவை முறையே, ஒன்றுக்கொன்று தாழ்ந்ததாகவும் - கடைசிச் சாதி மிக்க இழிவானதாகவும், கருதப்படுவதாகக் குறிக்கப் பட்டிருக்கின்ற விவரம் யாவரும் அறிந்ததேயாகும். இப்படி இருந்தாலும், இப்போது அநேக சாதிகள் இருப்பதற்கு என்ன காரணம்? அதாவது, “ ஆதியில் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட நான்கு வருணத்தாரும் தங்களில் சாதி முறை தவறிக் “கலப்பு “, “விபச்சாரம்“, செய்து கொண்டதால் ஏற்பட்ட பிரிவுகளுக்குப் பஞ்சம சாதியார்கள் என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறதென்றும் ஆதாரங்களில் இருக்கின்றன.
அப்படிச் சொல்லப்படுவதிலும் இப் “ பஞ்சம சாதிகள் “ என்பது, இப்போது நமது நாட்டில் பெரும்பான்மையாய் இருக்கும் பல முக்கியமான சாதிக்காரர்கள் என்பவர்களே பெரிதும் இந்த விபச்சாரப் பெருக்கால் ஏற்பட்ட - பஞ்சம சாதிகள் என்றே காட்டப்பட்டிருக்கின்றது. ஆகவே, அதில் உதாரணமாக இன்று தமிழ்நாட்டில் பிரபல சாதியும் பிரமுக சாதியும் என்று சொல்லிக் கொள்ளப்படுவதான வேளாள சாதியார் எனப்படுபவர்களே பஞ்சம சாதியில் சேர்ந்தவர்கள் என்றும், பஞ்சம சாதியிலும் பிராமணன், க்ஷத்திரியப் பெண்ணை சோரத்தால் கலந்ததால் பிறந்தவர்கள் என்றும் குறிக்கப்பட்டிருக்கின்றது.
இவர்களில் - இந்தப் படியான வேளாளர் என்பவர்களில், விவசாயம் செய்பவர்களாக இருந்தால் அவர்களுக்குக் “ காணியாளர் “ என்றும் பதவிகளில் இருந்தால், “ வேளாண் சாமந்தர் “ என்றும் குறிக்கப்பட்டிருப்பதுடன், இவற்றிக்கு ஆதாரம் சுப்ரபோதகம், பிரம்ம புராணம், வைகாநசம், மாதவியம், சாதி விளக்கம் என்கிற நூல்கள் என்றும் உள்ளது.
பிராமணன் - வைசியப் பெண்ணுடன் கலியாணத்தால் பிறந்த பிள்ளை அம்பட்டன் என்றும், சோரத்தால் பிறந்த பிள்ளைகள் குயவர், நாவிதர் என்றும் உள்ளது.
அதுபோலவே, பிராமணன் - சூத்திர பெண்ணுடன் கலியாணத்தால் பிறந்த பிள்ளை “ பரதவர் “ அல்லது “ செம்படவர் “ என்றும் சோரத்தால் பிறந்த பிள்ளை “ வேட்டைக்காரன் “ அலலது “ வேடுவர் “ என்றும் உள்ளது.
அதுபோலவே, பிராமணன், க்ஷத்திரிய சாதிப் பெண்ணை விவாகம் செய்து கொண்டதால் பிறந்த பிள்ளைகளே “ சவர்ணர் “ எனவும், “தெலுங்கர் “ எனவும் உள்ளது.
பிராமணப் பெண்ணுடன் சூத்திரன் விபச்சாரம் செய்ததால் பிறந்தவர்கள் “ சண்டாளர்கள் “ என்றும் உள்ளது.
பிராமணப் குலப் பெண்ணுடன் சண்டாளர் கூடிப் பிறந்த பிள்ளைகள் “சருமக்காரர் “ அதாவது “ சக்கிலியர் “ என்றும் க்ஷத்திரிய குல பெண்ணுடன் சண்டாளர்கள் சேர்வதால் பிறந்த மக்கள் “ வேணுகர் “ (வேணுகானம் செய்பவர் )“ “ கனகர் “ (தங்கவேலை செய்பவர் ) “ , “ சாலியர் “ (நெசவு வேலை செய்பவர் ) ஆவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாதிரி, கீழ் - மேல் சாதிகள் கலந்து கலந்து வந்ததால் ஏற்பட்ட சாதிகளில் ஒன்றாகிய “ அயோவகச் சாதிப் “ பெண்ணிடம், நிடாதனுக்குப் பிறந்த பிள்ளைகள் “ பார்க்கவர்கள் “ என்றும் உளளது. இந்தப்படியே, இப்போது அமலில் உள்ள சாதிகளெல்லாம் குறிக்கும் படியாகவே இன்னும் அநேக விஷயங்கள் காணப்படுகின்றன. அபிதான கோசம், அபிதான சிந்தாமணி முதலிய - எல்லா இந்துப் பண்டிதர்களாலும், ஆதாரமாய்க் கொண்டாடப்படும் புத்தகங்களிலும், மற்றும் பல சாதிகளை இதைவிடக் கேவலமாகவும, குறிக்கப்பட்டிருக்கின்றதோடு நான்கு சாதிகள் தவிர, மற்றச் சாதிகள் எல்லாம் மேற்கண்ட நான்கு சாதிக்குள் மேல் கீழாகவும், கீழ் மேலாகவும், கலியாணம் செய்தும், விபச்சாரம் செய்தும் பிறந்த பிள்ளைகளாக ஏற்பட்டவர்கள் செட்டியார், ஆச்சாரியார் இவர்களைப் பற்றியும் மிகமிக இழிவாகக் கூறப்படுகின்றது.
ஆகவே, சாதியைக் கட்டிக்கொண்டு அழுவது இவ்விழிவுகளை மறைமுகமாய் ஏற்றுக் கொள்வதையே ஒக்கும்.
( “ குடி அரசு “ தலையங்கம் / 16-11-1930 )
No comments:
Post a Comment